மணிலா: மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்ற பயணிகள் படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 87 பேரைக் காணவில்லை என அந்நாட்டு கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ என்ற பயணிகள் படகு, தலைநகர் மணிலாவில் இருந்து சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. கரையில் இருந்து சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் சென்றபோது, நேற்று இரவு எதிர்பாராதவிதமாக படகில் தீப்பிடித்தது. இந்த படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என மொத்தம் 134 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கடலோரக் காவல்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 42 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்த நிலையில், 87 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, மோசமான வானிலை மற்றும் கடலில் நிலவும் கடுமையான அலைகள் காரணமாக மீட்புப் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.