நீட் தேர்வு கல்வி அமைப்பை சீரழிக்கிறது; தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் - ராகுல் காந்தி
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் தேர்வு முறை மற்றும் அதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தி, நியாயமான கல்வி முறையை கோரி குரல் கொடுக்கும் மாணவர்களின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை என்றார். நீட் தேர்வு காரணமாக பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், தேர்வு நடைமுறையால் மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், தேர்வுக்கு பிறகு வினாத்தாள் கசிவு நடந்ததாக கூறப்படுவது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.கடந்த 10 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 152 முறை கசிந்துள்ளதாகவும், இதன் விளைவாக 5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார். மேலும், நீட் பயிற்சிக்காக மக்கள் ஆண்டுதோறும் சுமார் ரூ.1.32 லட்சம் கோடி செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசு இதுவரை யாருக்கும் தண்டனை பெற்றுத் தரவில்லை என்றும், இந்த வழக்குகளில் ஒருவர்கூட சிறையில் அடைக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை மத்திய அரசு அலட்சியமாக அணுகக் கூடாது என்றும், இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பொறுப்பில் தோல்வியடைந்துள்ளதாக கூறிய அவர், அவர் பதவி விலக வேண்டும் என்பது முழுமையாக நியாயமான கோரிக்கை என்றார்.
கல்வி அமைப்பை பாதித்ததாகக் கூறி தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தும் மாணவர்களின் கோரிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், நீட் தேர்வு நாட்டின் கல்வி அமைப்பை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகக் கூறிய ராகுல் காந்தி, மாணவர்களுக்கு வெளிப்படையானதும் நியாயமானதுமான கல்வி அமைப்பே தேவை என்றும் வலியுறுத்தினார்.