தொடர் மழையால் நெல்லை அணைகளில் வேகமாக உயரும் நீர்மட்டம்
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் மாஞ்சோலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. இதன் விளைவாக மாவட்டத்தின் முக்கிய அணைகளுக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களில் 27.20 அடி உயர்ந்து தற்போது 103.97 அடியை எட்டியுள்ளது. அதேபோல், 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இரண்டு நாட்களில் 9.90 அடி நீர்மட்டம் உயர்ந்து 73.30 அடியாக பதிவாகியுள்ளது.மேலும், கொடுமுடியாறு, கடனாநதி, கருப்பாநதி மற்றும் அடவிநயினார் அணைகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.36.10 அடி முழுக் கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பியுள்ளதால், அதற்கு வரும் 120 கனஅடி நீரும் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.தொடர்ச்சியான மழையால் தாமிரபரணி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நிலை உருவாகியுள்ளதுடன், விவசாயப் பணிகளும் வேகமடைந்துள்ளன. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.