தேசத்துரோக வழக்கில் தண்டனை: பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
ரஷியாவில் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.போர்ப்ஸ் ரஷியா இதழில் அறிவியல் மற்றும் மருத்துவப் பிரிவில் பத்திரிகையாளராக பணியாற்றிய தர்யா ஷிபச்சேவா, ரஷியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் உக்ரைனுக்கு ரகசியமாக நிதியுதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து, கடந்த 2025 ஆம் ஆண்டு அவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை மாஸ்கோ நீதிமன்றத்தில் பொதுமக்கள் அனுமதியின்றி மூடிய அறையில் நடைபெற்றது.வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி நேற்று அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை குறைத்துக் கொள்ளும் நோக்கில், தன் மீதான குற்றச்சாட்டை தர்யா ஷிபச்சேவா ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், நீதிமன்றத்திலேயே அவர் அதிர்ச்சியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியதிலிருந்து, அதிபர் விளாடிமிர் புதின் தலைமையிலான அரசு பத்திரிகையாளர்களை நோக்கி பல கடுமையான தணிக்கைச் சட்டங்களை அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தத் தீர்ப்புக்கு முன்பே ரஷியாவில் பல பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.மேற்கத்திய நாடுகளுக்காக உளவு பார்த்ததாகவும், உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு உலகளவில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.