திருவாரூரில் கனமழை: அறுவடைக்கு தயாரான 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
திருவாரூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2,000 ஏக்கர் குருவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.நன்னிலம், குடவாசல், கலக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் முழுமையாக மூழ்கியுள்ளன. இன்னும் சில நாட்களில் அறுவடை தொடங்க வேண்டிய நிலையில், வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நெற்கதிர்கள் அழுகுவதுடன், சில இடங்களில் முளைக்கவும் தொடங்கியுள்ளன.ஒரு ஏக்கருக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்த நிலையில், அறுவடை நேரத்தில் பெய்த கனமழையால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணத் தொகையை விரைவாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.