தாய்லாந்தில் கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கி 24 வயது வீரர் உயிரிழப்பு
தென் தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் சாம்கொல்ட்ஸ் மற்றும் அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி சன்டிபாப் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சாம்கொல்ட்ஸ் அணியைச் சேர்ந்த 24 வயதான வீரர் சோவ்யான் அவேய் மீது திடீரென மின்னல் தாக்கியது. அதிர்ச்சியடைந்த அவர் மைதானத்திலேயே கீழே விழுந்தார்.இதையடுத்து, சக வீரர்களும் அவசர மருத்துவக் குழுவினரும் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்ற முயன்றனர்.
இருப்பினும், மின்னல் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்தச் சம்பவத்தில் கால்பந்து வீரர் ஒருவரைச் சேர்த்து மொத்தம் 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வீரர் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.