தான் படித்த பள்ளிக்கு 3 மாடி புதிய கட்டிடம் கட்டிக்கொடுத்த நடிகர் தனுஷ்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், திரைப்படப் பணிகளில் பிஸியாக இருந்தபோதிலும், தான் கல்வி கற்ற பள்ளிக்காக செய்துள்ள உதவி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் இயங்கி வரும் தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு, தனது சொந்த நிதியில் மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கான்கிரீட் கட்டிடத்தை அவர் கட்டிக்கொடுத்துள்ளார். பள்ளியில் இருந்த பழைய மேற்கூரை அமைப்பை அகற்றிய பிறகு, அதன் இடத்தில் இந்த புதிய கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும், அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அந்தக் கட்டிடத்திற்கு 'தனுஷ் பிளாக்' என பெயரிடப்பட்டுள்ளது.தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஓம்' திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தனுஷ், பத்தாம் வகுப்பு வரை தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியிலேயே கல்வி பயின்றுள்ளார். அவர் கட்டிக்கொடுத்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தனுஷ், அவருடன் பள்ளியில் படித்த ஒளிப்பதிவாளர் குமரன், 1999-ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள், அவரது சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலாகீதா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.விழாவின் போது, தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை நேரில் சந்தித்த தனுஷ், ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் ஆசிரியர்களுடன் நினைவுப் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார். தான் கல்வி கற்ற பள்ளிக்காக புதிய கட்டிடத்தை அமைத்ததுடன், தன்னை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்திய அவரது இந்த செயல் சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.