தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஆண் மயில் ஒன்று தோகையை விரித்து நடனமாடிய காட்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை கோவில் பிரகாரப் பகுதியில் ஆண் மயில் ஒன்று தனது வண்ணமயமான தோகையை முழுவதுமாக விரித்து, அருகில் இருந்த பெண் மயிலின் முன்னிலையில் கம்பீரமாக நடனமாடியது.
Advertisement
முருகப் பெருமானின் வாகனமாக கருதப்படும் மயில், அவரது திருத்தலத்திலேயே தோகை விரித்து ஆடியதை பார்த்த பக்தர்கள் உற்சாகமடைந்தனர். இந்த அழகிய காட்சியை ஏராளமானோர் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும், அந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து மகிழ்ந்தனர். கோவில் வளாகத்தில் மயில் தோகை விரித்து ஆடிய இந்த அழகிய தருணம், அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது.