தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 8) மற்றும் நாளை (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் அடிப்படையில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் வகையில் eKYC பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக மின்னணு குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை அடிப்படையிலான அடையாள சரிபார்ப்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் இந்தப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86 சதவீதம் eKYC பதிவு நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பதிவுகளையும் முழுமையாக முடிக்கும் நோக்கில் இந்த இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
எனவே, இதுவரை ரேசன் கடைகளில் eKYC எனப்படும் விரல் ரேகை பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்று, விடுபட்டுள்ள eKYC பதிவை குடும்ப அட்டைதாரர்கள் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.