தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெயில் மற்றும் மழை மாறி மாறி நிலவும் காலநிலையால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement
இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,830 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.