டெல்லி ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு தீவிரம்; மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. இந்தப் போராட்டம் நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக விரிவடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையில், போராட்டங்களில் பங்கேற்று கைது செய்யப்பட்டோ அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோ இருந்த, எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாத 18 வயதுக்கு உட்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்கலாம்; ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்தச் சூழலில், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எப்.ஐ.ஆர்.களும் திரும்பப் பெறப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் தீவிரமடையும் என்று சிஜேபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.டெல்லி போலீசாருடன் துணை ராணுவப் படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க இரும்புத் தடுப்புகள் வெல்டிங் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முக்கிய கோரிக்கைகள்:
* போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எப்.ஐ.ஆர்.களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
* கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
* டெல்லி போலீஸ் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் புதிய வழக்குகளை பதிவு செய்யக் கூடாது.
* அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நகலை உடனடியாக பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.