டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை இன்று எதிர்கொள்ளும் இந்தியா... தொடரை கைப்பற்றுமா?
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஹராரேவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.இந்த நிலையில், இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று (சனிக்கிழமை) ஹராரேவில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 125 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, அந்த இலக்கை வெறும் 13.2 ஓவர்களில் எட்டியது.இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்களான மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியது முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல், வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் அதிரடி அரைசதம் விளாசி அணியின் வெற்றியை எளிதாக்கினார்.புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயாஸ் அய்யருக்கு கிடைத்த முதல் வெற்றியும் இதுவே. அதே உற்சாகத்துடன் இன்றைய போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.மறுபுறம், சிகந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி அளித்திருந்தது.