ஜார்கண்டில் ரூ.2.2 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் கைது
ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.2.2 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அரசால் தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) அமைப்பின் முக்கிய உறுப்பினரான 65 வயதுடைய மிசிர் பெஸ்ரா, நீண்ட காலமாக பாதுகாப்பு அமைப்புகளால் தேடப்பட்டு வந்தார். அவரைப் பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.2.2 கோடி பரிசு வழங்கப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.மிசிர் பெஸ்ரா மீது மொத்தம் 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை ஜார்கண்டின் தன்பாத் மாவட்டம் மணியாடி பகுதியில் நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.இந்த நடவடிக்கையின் போது, ரூ.15 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த ஒருவர் உட்பட மேலும் இரண்டு மாவோயிஸ்டுகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சாகர் டா மற்றும் பாஸ்கர் டா என்ற பெயர்களாலும் அறியப்படும் மிசிர் பெஸ்ரா, 1980 முதல் தடை செய்யப்பட்ட இந்த அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக மாநில டி.ஜி.பி. தடாஷா மிஷ்ரா இன்று ராஞ்சியில் தெரிவித்துள்ளார்.