சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்கப்பட்ட தெருநாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலம் இதுவரை 60,216 தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார். சென்னையில் பொதுமக்களை வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதுடன், ரேபிஸ் இல்லாத மாநகரமாக சென்னையை உருவாக்கும் நோக்கில் அனைத்து தெருநாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை மற்றும் இராயபுரம் ஆகிய 4 மண்டலங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டன. தற்போது மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் உள்ள தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
Advertisement
இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 10 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை 60,216 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும், அக மற்றும் புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்துகளும் செலுத்தப்பட்டுள்ளன. மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் முகாம் நிறைவடைந்த பின்னர், சென்னையின் பிற மண்டலங்களிலும் இதேபோன்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் 50 வேலை நாட்களுக்குள் சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் சுமார் 2 லட்சம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்துகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ‘வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை’ என்ற இலக்கை அடைய, பொதுமக்கள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.