தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நல்லம்பள்ளி அருகே உள்ள ஜருகு பகுதியைச் சேர்ந்த 13 வயதான அவிநிஷா, தர்மபுரியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையையொட்டி உறவினர்களுடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது மெயின் அருவி அருகே காவிரி ஆற்றில் அவர் குளித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்ததால், அவிநிஷா நிலைதடுமாறி ஆழமான பகுதிக்குள் அடித்துச் செல்லப்பட்டார்.
Advertisement
அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் ஒகேனக்கல் போலீசாரும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியை தொடங்கினர். ஆற்றின் ஆழமான பகுதிகள் மற்றும் கரையோரங்களில் மாணவியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை மாணவி மீட்கப்படாத நிலையில், ஒகேனக்கல் பகுதியில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.