தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடிதம்
ஆம்னி பேருந்துகளுக்கான புதிய பர்மிட்கள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதனால் பயணிகளுக்கு ஏற்படும் போக்குவரத்து பற்றாக்குறை, அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பு மற்றும் பேருந்து உரிமையாளர்களின் பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் இருந்து தினமும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சுமார் 1,200 ஆம்னி பேருந்துகளும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பகுதிகளுக்கு சுமார் 600 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் சென்னையில் இருந்து மட்டும் தினசரி சுமார் 1,800 ஆம்னி பேருந்துகளில் 70,000-க்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதுடன், தினமும் 2.50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். பொதுமக்களின் போக்குவரத்து தேவையில் முக்கிய பங்கு வகிக்கும் இத்துறை, அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.900 கோடி நேரடி வருவாயையும், சுமார் ரூ.3,000 கோடி மறைமுக வருவாயையும் பெற்றுத் தருகிறது. அரசு பொறுப்பேற்ற பின்னர், முந்தைய போக்குவரத்து ஆணையர் பதவியில் இருந்த காலகட்டத்தில் 51 நாட்களுக்கும் மேலாக ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட்கள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய போக்குவரத்து ஆணையர் பொறுப்பேற்ற பிறகு, பர்மிட் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு, முதற்கட்டமாக சுமார் 270 பர்மிட்கள் விரைவாக வழங்கப்பட்டன. ஆனால் அதன்பிறகு விண்ணப்பிக்கப்பட்ட சுமார் 300 பர்மிட்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட 270 பர்மிட்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பல பேருந்துகளுக்கு, ஒவ்வொரு பேருந்துக்கும் காலாண்டுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் சாலை வரி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் போக்குவரத்து ஆணையரின் இறுதி ஒப்புதல் கிடைக்காததால் அந்தப் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றுலா பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளின் பதிவு மற்றும் ஒப்புதல் பணிகளும் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலுவையில் இருப்பதால், பேருந்து உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன், அரசுக்கும் வரி வருவாய் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக சங்கம் கூறியுள்ளது. அதேசமயம், பயணிகளுக்கான போக்குவரத்து வசதியிலும் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 22 எல்லை சுங்கச் சாவடிகளிலும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ.500 முதல் ரூ.3,000 வரை கையூட்டு பெறப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.