சவுகார் ஜானகி மறைவுக்கு பின்னணி பாடகி சுசீலா இரங்கல்
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.
சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த சவுகார் ஜானகிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுகார் ஜானகியின் உடலுக்கு இன்று காலை முதலே திரைப்பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எம்.எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, ஷாலினி அஜித், நடிகர் சங்க நிர்வாகிகள், சிவகுமார், குட்டி பத்மினி, சத்யராஜ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மா. சுப்பிரமணியம் ஆகியோரும் சவுகார் ஜானகியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சவுகார் ஜானகி நடித்த பல புகழ்பெற்ற திரைப்படங்களின் பாடல்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் பாடகி பி. சுசீலா. நீண்டகால நட்பைக் கொண்டிருந்த சவுகார் ஜானகியின் மறைவு குறித்து அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.சவுகார் ஜானகியின் மறைவு தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ள பி.
சுசீலா, இருவருக்கும் இடையிலான உறவு திரைத்துறையைத் தாண்டியும் நீடித்ததாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பக்தர்களாக இருந்த காலத்தில், பாபா தொடர்பான நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றியது தங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த அதிர்ச்சியான இழப்பை தனது மனதால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், சவுகார் ஜானகியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பி. சுசீலா கூறியுள்ளார். அவரது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.சவுகார் ஜானகியின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட பின்னர், இன்று மாலை 4 மணிக்கு மேல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.