சக்தி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா... காரைக்கால் பேட்டை கிராமத்தில் பால்குட ஊர்வலம்
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே உள்ள பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த 7-ம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது.இதையொட்டி அரசலாற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டனர்.
கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற அவர்கள், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர்.அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தில் இருந்த பால் மூலம் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்காக விரதம் மேற்கொண்டுள்ள ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.