கோவில் உற்சவங்களின் துவக்கமாக அங்குரார்ப்பணம் நடத்துவது ஏன்?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, விழாவின் தொடக்க நிகழ்வாகக் கருதப்படும் அங்குரார்ப்பணம் எனப்படும் முளையிடும் சடங்கு நேற்று இரவு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. கும்பாபிஷேகம், பிரம்மோற்சவம், பவித்ரோற்சவம் உள்ளிட்ட முக்கிய கோவில் வைபவங்களுக்கு முன்பாக அங்குரார்ப்பணம் நடத்தப்படுவது வழக்கம். வைகானச ஆகமத்தில் இடம்பெறும் இந்த சடங்கு, யாகசாலையில் புனித விதைகளை விதைக்கும் நிகழ்வாகும். இதற்கு ‘பீஜாவாபனம்’ என்றும் பெயர் உண்டு. மனிதகுல நலனையும், இறையருளையும் வேண்டி இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. அங்குரார்ப்பணத்தின்போது ‘பாலிகா’ என்று அழைக்கப்படும் மண் கலயங்களில் 9 வகையான தானியங்கள் விதைக்கப்படுகின்றன. அவை முளைத்து நன்றாக வளர்வது, நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் எந்தவித தடையும் இன்றி சிறப்பாக நடைபெறும் என்பதற்கான மங்கள அறிகுறியாகக் கருதப்படுகிறது. விதைகள் வாழ்வு, வளம், வளர்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளங்களாக பார்க்கப்படுகின்றன.