திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, விழாவின் தொடக்க நிகழ்வாகக் கருதப்படும் அங்குரார்ப்பணம் எனப்படும் முளையிடும் சடங்கு நேற்று இரவு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. கும்பாபிஷேகம், பிரம்மோற்சவம், பவித்ரோற்சவம் உள்ளிட்ட முக்கிய கோவில் வைபவங்களுக்கு முன்பாக அங்குரார்ப்பணம் நடத்தப்படுவது வழக்கம். வைகானச ஆகமத்தில் இடம்பெறும் இந்த சடங்கு, யாகசாலையில் புனித விதைகளை விதைக்கும் நிகழ்வாகும். இதற்கு ‘பீஜாவாபனம்’ என்றும் பெயர் உண்டு. மனிதகுல நலனையும், இறையருளையும் வேண்டி இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. அங்குரார்ப்பணத்தின்போது ‘பாலிகா’ என்று அழைக்கப்படும் மண் கலயங்களில் 9 வகையான தானியங்கள் விதைக்கப்படுகின்றன. அவை முளைத்து நன்றாக வளர்வது, நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் எந்தவித தடையும் இன்றி சிறப்பாக நடைபெறும் என்பதற்கான மங்கள அறிகுறியாகக் கருதப்படுகிறது. விதைகள் வாழ்வு, வளம், வளர்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளங்களாக பார்க்கப்படுகின்றன. அவற்றிலிருந்து முளைகள் உருவாவது, விழாவின் வெற்றியையும் பக்தர்களின் நலனையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. பாரம்பரிய நம்பிக்கையின்படி, சந்திரன் தாவரங்களின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் ‘சஸ்ய காரகன்’ எனக் கருதப்படுகிறார். இதன் காரணமாகவே அங்குரார்ப்பணம் பொதுவாக இரவு நேரத்தில் நடத்தப்படுகிறது. சாஸ்திரங்களின்படி, முக்கிய உற்சவத்திற்கு 9 நாட்களுக்கு முன்பு அங்குரார்ப்பணம் நடத்துவது சிறந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், சூழ்நிலையைப் பொறுத்து 7, 5, 3 அல்லது குறைந்தபட்சம் ஒரு நாள் முன்பாகவும் இந்த சடங்கை நடத்தலாம். அங்குரார்ப்பணத்தில் விதைக்கப்படும் நவதானியங்கள் ஒன்பது வகை பயிர்களை மட்டும் குறிக்கவில்லை. அவை நவக்கிரகங்களையும் பிரதிபலிப்பதாக கோவில் அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, கோதுமை – சூரியன், அரிசி – சந்திரன், துவரை – செவ்வாய், பாசிப்பயறு – புதன், கொண்டைக்கடலை – வியாழன், தட்டைப்பயறு – வெள்ளி, எள் – சனி, உளுந்து – ராகு, கொள்ளு – கேது ஆகியவற்றைக் குறிக்கின்றன.