கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை: செப்டம்பர் 1 முதல் கடும் நடைமுறை
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்வதற்கான தடை வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வர உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.கோவில்களின் புனிதத்தன்மை, ஆன்மீக சூழல் மற்றும் அமைதியை பாதுகாக்கும் நோக்கில், ஏற்கனவே கோவில் வளாகங்களுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. இந்நிலையில், செல்போன் கொண்டு செல்வதற்கான தடை முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது.இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் நிர்வாகங்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தடையை மீறி கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்று புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால், சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும், வி.ஐ.பி.க்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கோவில்களுக்கு வருகை தரும் நேரங்களில், அவர்களுடன் செல்லும் ஊடகத்தினர் அல்லது தனிநபர்கள் கோவிலுக்குள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.