குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைச்சாலையில் சுற்றுலா பயணிகளை துரத்திய ஒற்றை காட்டு யானை
நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதியில் தற்போது பலாப்பழ சீசன் நடைபெற்று வருவதால், அங்குள்ள பலா மரங்களில் பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளன. அவற்றை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூர்–மேட்டுப்பாளையம் மலைச்சாலைக்கு வந்து முகாமிட்டுள்ளன.அந்த யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை, கடந்த சில நாட்களாக மரப்பாலம், இச்சி மரம் மற்றும் காட்டேரி பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறது.இந்நிலையில், காட்டேரி பூங்கா முன்பகுதியில் உள்ள சாலையை அந்த யானை திடீரென கடந்து சென்றது.
அப்போது அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி அது ஆக்ரோஷமாக விரைந்ததால், அவர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர்.மேலும், சாலையில் சென்ற வாகனங்களையும் யானை வழிமறித்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, அதை வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.