குடிபோதையில் கார் ஓட்டிய பெண் யூடியூபரின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தன்யா. இவர் யூடியூபராக இருந்து வருகிறார். கடந்த மாதம் 1-ந் தேதி காசர்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படுகிறது.
வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருப்பதை பார்த்த தன்யா, காரை நிறுத்தாமல் வேகமாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டிச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் ஜீப்பில் அவரை பின்தொடர்ந்து சென்று காரை மடக்கிப் பிடித்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் தன்யா மது அருந்தியிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர் காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அந்த பரிசோதனையிலும் அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தன்யா ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், குடிபோதையில் கார் ஓட்டிய குற்றச்சாட்டில் பெண் யூடியூபர் தன்யாவின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்து மோட்டார் வாகன போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும், 3 நாட்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பில் தன்யா கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் துறை உத்தரவிட்டுள்ளது.