கேரளாவில் கனமழை, நிலச்சரிவு: 3 பேர் உயிரிழப்பு; 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதன் காரணமாக இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தின் அடூர் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு வீடு முழுவதுமாக மண்ணில் புதைந்ததில், அந்த வீட்டில் வசித்து வந்த சுமதி உயிரிழந்தார். அவருடைய கணவர் ரவி மற்றும் மகன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு, தொடுபுழாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையில், வாகமண் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் வீடு மண்ணில் புதைந்ததில், வைக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் நாயர் உயிரிழந்தார். மேலும் ஒருவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புப் படையினர் இடுக்கிக்கு விரைந்துள்ளனர். பலத்த மழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளாவின் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான மலைப்பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயத்தில் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதால், மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. வாகமண் மற்றும் ஏலப்பாறை பகுதிகளிலும் வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.பம்பை மற்றும் கக்கட்டார் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவால் பல இடங்களில் சாலை மற்றும் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.