கனடாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
கனடாவில் நடைபெற்ற பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை முறியடித்த போலீசார், இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேரை கைது செய்துள்ளனர். இந்த சோதனையில் 1.7 டன் போதைப்பொருட்களும், 17 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அமெரிக்க எல்லை வழியாக லாரிகளில் கனடாவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமெரிக்கா–கனடா இடையே இயக்கப்படும் லாரிகளில் கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கனடா போலீசார் 'புராஜெக்ட் பே' என்ற பெயரில் ஒருங்கிணைந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆண்டாரியோவில் 22 இடங்களிலும், விண்ட்சர், லசலே, கொரூனா, பிராம்ப்டன், மார்ஹம் மற்றும் கலேடன் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதில் 1.7 டன் போதைப்பொருட்கள் மற்றும் 17 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 19 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களில் ககன்தீப் திண்டல், சிம்ரன்ஜித் சிங், கன்வர்பால் குலார், ஜதிந்தர்பால் சிங், ஜஸ்விந்தர் சோஹி, தேஜ்விந்தர் சந்து, ஹர்ஜ்விந்தர் சந்து, தர்மிந்தர் சிங், கன்தீப் தரிவால், மஹப்ரீத் சிங் மற்றும் கரன்தீப் சிங் உள்ளிட்ட பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர் என போலீசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹1,039 கோடி என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.