உதயநிதி கைது, கடைகள் அடைப்பு; அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தம் கொண்ட வகையில் கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின. இதற்கு த.வெ.க. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், அக்கட்சியின் மகளிர் அணி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தது.
இந்த புகார்களின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மொத்தம் ஒன்பது பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, சென்னை போலீஸ் குழு இன்று நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று விசாரணை நடத்திய பின்னர், அவரை கைது செய்து மேலதிக விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றது.உதயநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பல இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க பல்வேறு பகுதிகளில் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த சூழ்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ள மு.க. ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனும் பங்கேற்றுள்ளார்.
இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கைது நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், அவர் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கையால் உதயநிதியையோ அல்லது தி.மு.க.வையோ முடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக இன்று கைது செய்யப்பட்டதன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க., சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் எழுப்ப திட்டமிட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத அச்சமே இந்த கைது நடவடிக்கைக்கு காரணம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.