இளம்பெண் வெட்டி கொலை; உடலை எரித்த காதலன் – அதிர்ச்சி சம்பவம்
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், கரம்புடி அருகே உள்ள இன்பராஜுபள்ளியைச் சேர்ந்தவர் பால சைதுலு. சிலக்கலூரிபேட்டையைச் சேர்ந்தவர் 24 வயதான ஷேக் ஹசீனா. இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்த நிலையில், தேர்வு எழுதச் சென்றபோது ஒருவருக்கொருவர் அறிமுகமாகியுள்ளனர். பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.தேர்வு முடிவில் பால சைதுலு தோல்வியடைந்த நிலையில், சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார். ஷேக் ஹசீனா தேர்வில் வெற்றி பெற்று சுல்லூர்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு பணிபுரிந்தபோது வேறு ஒரு ஆணுடன் அவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த பால சைதுலு, ஷேக் ஹசீனாவை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 4-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த ஷேக் ஹசீனாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், நேரில் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை நம்பி வெளியே வந்த ஷேக் ஹசீனா, பால சைதுலுவின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை அழைத்துச் சென்ற பால சைதுலு, வேறு ஒரு ஆணுடன் அவர் பழகுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது பால சைதுலு தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக் ஹசீனாவை சரமாரியாக தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து அவரது உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் ஷேக் ஹசீனாவின் உடல் சுமார் 80 சதவீதம் அளவுக்கு தீயில் கருகி, அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பால சைதுலு எதுவும் நடக்காதது போல் தனது வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளார். வீட்டை விட்டு வெளியே சென்ற ஷேக் ஹசீனா இரவு வரை வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர் சிலக்கலூரிபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷேக் ஹசீனாவின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அதில் அவரது செல்போன் கரம்புடி புறநகர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், தீயில் கருகிய நிலையில் கிடந்த உடலை மீட்டனர். உடல் முழுவதும் எரிந்து சிதைந்திருந்ததால், சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.விசாரணையில், ஷேக் ஹசீனாவுடன் கடைசியாக பால சைதுலு பேசியது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஷேக் ஹசீனாவை கொலை செய்து உடலை எரித்ததாக பால சைதுலு மீது குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.