இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங், வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.புது டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.இதற்கு முன்பு, 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அவர் இந்தியா வந்திருந்தார்.
அதன் பின்னர் எல்லைப் பகுதியில் நீடித்த பதற்றம் காரணமாக இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் நீண்ட காலமாக மந்தநிலையிலேயே இருந்து வந்தன.இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக சமீபத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் நடைபெறும் ஜி ஜின்பிங்கின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கிடையேயான ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.மேலும், இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பங்கேற்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.