மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், திருச்சூர் முன்னாள் மாவட்டச் செயலாளருமான பேபி ஜான் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தைக்குளத்தில் 1952-ம் ஆண்டு பிறந்த பேபி ஜான், அப்பகுதியில் செயல்பட்டு வந்த பி.வி.எம். எல்.பி. பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 1969-ம் ஆண்டு முதல் இடதுசாரி இயக்கங்களில் தீவிரமாக செயல்படத் தொடங்கிய அவர், 1971-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கட்சியின் முழுநேரப் பணியில் ஈடுபடுவதற்காக 1991-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தொடர்ந்து கட்சிப் பணிகளில் தீவிரமாக செயல்பட்ட அவர், 2006-ம் ஆண்டு முதல் திருச்சூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்றார். வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் காரணமாக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நீண்ட காலமாக பேபி ஜான் சிகிச்சை பெற்று வந்தார்.
Advertisement
எனினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பேபி ஜானின் உடல் இன்று காலை சிபிஐ(எம்) திருச்சூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் பூவத்தூரில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 2.30 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு, பிற்பகல் 3 மணி முதல் சாவக்காட்டில் உள்ள ஹோ சி மின் நினைவு மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும். மாலை 4 மணிக்கு சாவக்காடு பொது சுடுகாட்டில் பேபி ஜானின் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.