அறுவை சிகிச்சை வெற்றி: நடிகர் ராம்சரண் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் நடித்துள்ள 'பெத்தி'திரைப்படம் அண்மையில் வெளியாகியது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கிய இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விளையாட்டை மையமாகக் கொண்டு அதிக பொருட்செலவில் உருவான இந்தத் திரைப்படம் வெளியான பின்னர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது ராம்சரணின் வலது கை மணிக்கட்டில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.இதையடுத்து, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கங்கா மருத்துவமனையில் கடந்த 26-ஆம் தேதி ராம்சரண் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, 27-ஆம் தேதி அவருக்கு வெற்றிகரமாக மணிக்கட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை காலத்தில் அவரது தந்தை நடிகர் சிரஞ்சீவி, தாய் சுரேகா மற்றும் மனைவி உபாசனா உள்ளிட்ட குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ராம்சரணுக்கு மேற்கொள்ளப்பட்ட சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், தற்போது அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இன்று (வியாழக்கிழமை) அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறினர்.