பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தை மக்கள் நலனுக்கு எதிரான ‘ரீல்ஸ் அரசியல்’ மோகத்தில் இருந்து மீட்டு, அண்ணா ஆட்சியை மீண்டும் கொண்டு வர உறுதியேற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்களிடையே தன்மான உணர்வை ஏற்படுத்தியதுடன், சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் மாநில உரிமைகள் உள்ளிட்ட திராவிட இயக்கக் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த தலைவராக அண்ணா திகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தைவிட கொள்கைக்கும், பதவியைவிட மக்களுக்கும், தனிப்பட்ட புகழைவிட சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளித்தவர் அண்ணா என எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement
அவரது அரசியல் பயணம் பல தலைமுறைகளுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழினத்தின் தன்மானக் குரலாகவும், கொள்கையின் அடையாளமாகவும் விளங்கும் அண்ணாவை அவரது பிறந்தநாளில் போற்றி வணங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மக்கள் நலனுக்கு எதிரான ‘ரீல்ஸ் அரசியல்’ மோகத்திலிருந்து தமிழகத்தை விடுவித்து, மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும் அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவ இந்நாளில் உறுதியேற்போம் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் தெரிவித்துள்ளார். “வாழ்க அண்ணா நாமம்!” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.