விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் இன்று (ஆகஸ்ட் 27, 2026) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.48-க்கு விற்பனையான சர்க்கரை, தற்போது ரூ.70 வரை விற்கப்படுகிறது. எத்தனால் தயாரிப்புக்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்காக திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையே இதற்கு முக்கிய காரணம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வால் டீ, காபி விலையும் மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால், சாலையோர தேநீர் கடைகள் உள்ளிட்ட இடங்களில் டீ விலை ரூ.15 வரையும், காபி விலை ரூ.20 வரையும் அதிகரித்துள்ளது. தற்போது சர்க்கரை விலை உயர்வின் காரணமாக இவற்றின் விலை மீண்டும் உயரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.அதேபோல், அரிசியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு மற்றும் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் பொன்னி அரிசி கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இட்லி அரிசியின் விலை ரூ.35 வரை உயர்ந்துள்ளது.பருப்பு வகைகளின் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. உளுத்தம் பருப்பு கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.150 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆகவும், தனியா ரூ.160-ல் இருந்து ரூ.250 ஆகவும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எண்ணெய் உள்ளிட்ட பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏழை குடும்பங்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவில் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மு.வரதன், வடசென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார். அப்போது, அரிசி மற்றும் கரும்பு உள்ளிட்ட உணவுப் பயன்பாட்டுக்கான பொருட்களை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், உணவுப் பொருட்களின் பதுக்கல் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வழங்குவதுடன், ஏழை மக்களுக்கு அவற்றை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கு அதிக பொறுப்பு இருப்பதால், அந்த பொறுப்பை உணர்ந்து மத்திய பாஜக அரசு செயல்பட வேண்டும் என்றும் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மு.கண்ணகி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த.லெனின், மாநிலக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, லி.உதயகுமார், இரா.திருமலை, பா.தினேஷ், க.இப்ராஹிம் மற்றும் மாணவர்மன்ற நிர்வாகிகள் மணிகண்டன், சௌமியா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.