நெல்லை: மேல்சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் பழைய வீட்டை இடிக்கும் பணியின்போது மேல்சுவர் மற்றும் கூரை திடீரென இடிந்து விழுந்ததில், கட்டிட தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பாளையங்கோட்டை பகுதியில் பழமையான வீடு ஒன்றை இடிக்கும் பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்தப் பணியில் நெல்லையைச் சேர்ந்த தளவாய் (40) உள்ளிட்ட சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.வீட்டின் ஒரு பகுதியை தொழிலாளர்கள் இடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மேல்சுவர் மற்றும் கூரைப்பகுதி பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் தளவாய் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் பணியாற்றிய மற்ற தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இடிபாடுகளை அகற்றி தளவாயின் உடலை மீட்டனர்.பின்னர் பாளையங்கோட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருந்தனவா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.