விருதுநகர் மேற்கு மாவட்டத்தை வலிமையான மாவட்டமாக உருவாக்குவோம்: அமைச்சர் கீர்த்தனா
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அமைப்பு ரீதியாக ஏற்கனவே 128 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். நிர்வாக வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதலாக 27 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாவட்டங்களுக்கு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் நியமித்துள்ளார்.அதன்படி, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் புதிய பொறுப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்கும் அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
தன் மீது நம்பிக்கை வைத்து புதிய பொறுப்பை வழங்கிய கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய்க்கும், கழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து வழிகாட்டி ஊக்கமளித்து வரும் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான அன்பிற்கினிய ஆனந்த்துக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், சிவகாசி தொகுதியைச் சேர்ந்த கழகத் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அளித்து வரும் அன்பு மற்றும் ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்றுள்ள பொறுப்பில் அவர்களின் ஒற்றுமையும் ஆதரவும் தொடர்ந்து தனக்கு ஊக்கமளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.கழகத் தலைவர் வழங்கியுள்ள இந்த வாய்ப்பு வெறும் பதவியாக இல்லாமல், மக்களுக்காக இன்னும் அதிகமாக உழைக்க வேண்டிய பொறுப்பாக கருதுவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். அந்த நம்பிக்கையை காப்பாற்றி, விருதுநகர் மேற்கு மாவட்டத்தை கழகத்தின் வலிமையான மாவட்டங்களில் ஒன்றாக உருவாக்க உறுதியுடன் செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.கழகத் தலைவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையுடனும், கழகத்தின் கொள்கைகள் மற்றும் இலக்குகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உறுதியுடனும், ஒவ்வொரு ஒன்றியம், ஊர் மற்றும் குடும்பத்தையும் சென்றடையும் வகையில் பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.“இது தொடக்கம் மட்டுமே. இனி இன்னும் பெரிய இலக்குகளை நோக்கி உழைப்போம்; வெற்றி நிச்சயம்” என்ற நம்பிக்கையுடன் தனது பதிவை அமைச்சர் கீர்த்தனா நிறைவு செய்துள்ளார்.