லெபனான் தொழிலதிபருக்கு மீண்டும் அதிர்ஷ்டம்; மூன்றாவது முறையாக லாட்டரியில் கோடிகள் வென்றார்
லெபனானின் பெய்ரூட் நகரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபர் அண்டோனி லபாகி (53), துபாய் டியூட்டி ப்ரீ மில்லினியம் மில்லியனர் லாட்டரியில் மீண்டும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9.5 கோடி) பரிசை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.அண்டோனி லபாகிக்கு துபாய் டியூட்டி ப்ரீ மூலம் கிடைத்துள்ள மூன்றாவது பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு, 2004-ஆம் ஆண்டு பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும், 2018-ஆம் ஆண்டு முதல் முறையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசையும் அவர் வென்றிருந்தார்.
இந்த முறை, கடந்த ஜூலை 17-ஆம் தேதி இணையம் வழியாக வாங்கிய 3360 என்ற எண்ணுடைய டிக்கெட்டுக்கு ஜாக்பாட் கிடைத்தது. இதன் மூலம் துபாய் டியூட்டி ப்ரீ வரலாற்றில் இரண்டு முறை 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வென்ற 12-வது நபர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.பெய்ரூட்டில் தனது சகோதரியுடன் காபி அருந்திக் கொண்டிருந்தபோது, துபாயில் இருந்து பரிசு வென்ற தகவலை தெரிவிக்கும் தொலைபேசி அழைப்பு வந்ததாக லபாகி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கலீஜ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 2018-ஆம் ஆண்டு கிடைத்த பரிசுத் தொகையை லெபனானுக்கு மாற்றியதாகவும், அந்நாட்டின் அப்போதைய சூழ்நிலை காரணமாக அதை முதலீடு செய்ய முடியாமல் முழுமையாக இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.இதனால், இந்த முறை பரிசுத் தொகையை மிகவும் கவனமாக கையாள முடிவு செய்துள்ளதாகவும், முழுப் பணத்தையும் துபாயிலேயே முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.மேலும், துபாயில் சொந்த வீடு வாங்கி, தனது கட்டுமான நிறுவனத்தை அங்கிருந்தே விரிவுபடுத்தி, குடும்பத்துடன் நிரந்தரமாக குடியேறவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.துபாய் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய பரிசை வழங்கிய நகரமாக உணர்கிறேன் என்றும், இனி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து டியூட்டி ப்ரீ லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கப் போவதாகவும் அண்டோனி லபாகி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.