மாரத்தான் ஓட்டத்தின்போது மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
பெங்களூரு அருகே நந்தி மலையில் நடைபெற்ற பருவமழை மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 31 வயது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.பெங்களூரு புறநகர் மற்றும் சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிர்வாகம், இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை சார்பில் நந்தி மலையில் நேற்று பருவமழை மாரத்தான் போட்டி நடைபெற்றது. 10 கிலோ மீட்டர் மற்றும் 21 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 4,500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.இதில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமன்தீப் சிங் ஜக்டே (31) என்பவரும் பங்கேற்றார். பெங்களூருவில் உள்ள மன்யதா டெக் பார்க்கில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், 21 கிலோ மீட்டர் பிரிவில் ஓடினார்.போட்டியில் பாதி தூரத்தை கடந்த நிலையில் திடீரென அமன்தீப் சிங் மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பஞ்சாப்பில் உள்ள அவரது மனைவிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.