மத்திய அரசின் வீரதீரச் செயலுக்கான விருது: முதல்வர் விஜய் வழங்கினார்
மத்திய அரசின் 2025-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த தலைமை ஆசிரியர் பி.எஸ். கெளரிசங்கர் ராஜாவுக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை அவரது மனைவியிடம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று (ஆகஸ்ட் 27) வழங்கினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் எலுவப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மறைந்த தலைமை ஆசிரியர் பி.எஸ். கெளரிசங்கர் ராஜாவின் மனைவி கொ. சிரிஷாவிடம் விருதுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.ஒவ்வொரு ஆண்டும் வீரதீரச் செயலுக்கான ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதுக்கு மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசு பரிந்துரைகளைப் பெறுகிறது. அதன் அடிப்படையில் விருதாளர்களை ஜனாதிபதி தேர்வு செய்து அறிவிப்பார்.கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றது.
மதிய உணவு இடைவேளையின்போது, 3-ம் வகுப்பு படித்த 8 வயது சிறுவன் நிதின், பள்ளிக்கு அருகிலிருந்த விவசாயப் பண்ணைக் குட்டையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான்.நீரில் தத்தளித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிய சிறுவனைப் பார்த்த தலைமை ஆசிரியர் பி.எஸ். கெளரிசங்கர் ராஜா, அவனை மீட்க முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக சிறுவனும், தலைமை ஆசிரியரும் உயிரிழந்தனர்.சிறுவனைக் காப்பாற்றும் முயற்சியில் வெளிப்படுத்திய துணிச்சல், வீரதீரச் செயல் மற்றும் தியாகத்தைப் பாராட்டும் வகையில் பி.எஸ். கெளரிசங்கர் ராஜாவுக்கு மரணத்திற்குப் பிந்தைய ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருது வழங்கப்பட்டுள்ளது.