பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி: தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
தெஹல்கா ஊடக நிறுவனத்தின் இணை நிறுவனர் தருண் தேஜ்பால் தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கில், மும்பை உயர்நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும், இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு 2013 நவம்பரில் கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற தெஹல்கா நிகழ்ச்சியின்போது நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து உருவானது. அப்போது, தருண் தேஜ்பால் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்கியதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சுமார் ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.இந்த வழக்கை விசாரித்த கோவா செஷன்ஸ் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண் தருண் தேஜ்பாலுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளில் சம்பவத்தால் அதிர்ச்சி அல்லது அச்சம் ஏற்பட்டதற்கான தெளிவான சான்றுகள் இல்லை என்று குறிப்பிட்டு, 2021ஆம் ஆண்டு அவரை விடுதலை செய்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து கோவா அரசு மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அப்போது, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தருண் தேஜ்பால் அனுப்பிய மின்னஞ்சல் முக்கிய ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.தண்டனை அறிவிக்கப்படும் முன் நீதிமன்றத்தில் ஆஜரான தருண் தேஜ்பால், தனக்கு தற்போது 62 வயதாகிறது என்றும், அரசியல் பழிவாங்கலின் காரணமாக இந்த வழக்கில் சிக்கியுள்ளதாகவும் கூறினார். மேலும், தனக்கு குடும்பப் பொறுப்புகள் இருப்பதாகவும், கருணை அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தார்.இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த மும்பை உயர்நீதிமன்றம், கோவா செஷன்ஸ் நீதிமன்றத்தின் விடுதலைத் தீர்ப்பை ரத்து செய்து, தருண் தேஜ்பாலை குற்றவாளி என அறிவித்தது. அதனுடன், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தருண் தேஜ்பால், தன்னை அரசியல் காரணங்களால் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மீண்டும் கூறினார். மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.