சிங்கப்பூர் வெளியுறவுத்துறை நிரந்தர செயலாளர் லூக் கோவை சந்தித்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
புதுடெல்லிக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் லூக் கோவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த உயர்மட்ட சந்திப்பில், இந்தியா–சிங்கப்பூர் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படுதல், உற்பத்தித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் உலகளாவிய எரிசக்தி தேவைகள் மற்றும் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை அதிகரித்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில் தெரிவித்தார்.லூக் கோவின் இந்திய பயணத்தை முன்னிட்டு, புதுடெல்லியில் 19-வது இந்தியா–சிங்கப்பூர் வெளியுறவு அலுவலக ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (கிழக்கு) ருத்ரேந்திர டாண்டன் மற்றும் சிங்கப்பூரின் நிரந்தர செயலாளர் லூக் கோ ஆகியோர் இணைந்து தலைமை வகித்தனர்.கூட்டத்தில், இந்தியா–சிங்கப்பூர் இடையேயான ‘விரிவான மூலோபாய கூட்டாண்மை’ திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள எட்டு முக்கிய இலக்குகளின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இந்திய அரசின் பல்வேறு உயரதிகாரிகளையும் லூக் கோ சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.