கொடுக்கிற காரை இன்னோவாவாக வழங்குங்கள்: சட்டசபையில் எம்.எல்.ஏ. சண்முகன் கோரிக்கை
தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த வாகனம் இன்னோவா காராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என த.வெ.க. எம்.எல்.ஏ. சண்முகன் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில், தொகுதி மக்களின் பணிகளை எம்.எல்.ஏ.க்கள் சிறப்பாக மேற்கொள்வதற்கும், சட்டசபைக்கு சென்று வருவதற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மேலும், உதவியாளர்களை நியமித்துக் கொள்வதற்காக ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும், ஓட்டுநர் ஊதியம், வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளுக்காக மாதம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்புக்கு த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வரவேற்பு தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து பேசிய த.வெ.க.
எம்.எல்.ஏ. சண்முகன், முதல்-அமைச்சர் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தார். நியாயமான கோரிக்கை யார் தரப்பில் இருந்து வந்தாலும், அது மக்களுடையதாக இருந்தாலும் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுடையதாக இருந்தாலும் உடனடியாக நிறைவேற்ற முடியும் என்பதை முதல்-அமைச்சர் மீண்டும் நிரூபித்துள்ளதாக அவர் கூறினார்.அறம், நேர்மை, மக்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தை வழிநடத்தும் முதல்-அமைச்சர் கிடைத்திருப்பது பெருமையாக இருப்பதாகவும், அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் சண்முகன் குறிப்பிட்டார்.தொடர்ந்து, "வழங்கப்படும் காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என பின்னால் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்" என்று அவர் கூறினார். இதைக் கேட்டதும் முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட சட்டசபையில் இருந்த அனைவரிடமும் சிரிப்பலை எழுந்தது.