காணியம்மன் கோவில் விழாவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடத்திய இஸ்லாமிய குடும்பத்தினர்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு காணியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. சாதி, மத வேறுபாடுகளை கடந்து மனிதநேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணியம்மன் திருக்கல்யாண விழாவில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் பாரம்பரியம் சுமார் நூறு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கம், இருளப்பட்டி மக்களிடையே தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.2026-ம் ஆண்டு திருவிழாவையொட்டி காணியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து நடந்த திருக்கல்யாண வைபவத்தில், ஆம்பூரைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தினர் வழக்கம்போல் சீர்வரிசையுடன் கலந்து கொண்டனர். பின்னர் பாரம்பரிய முறைப்படி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருமண சடங்குகளை முன்னின்று நடத்தினர்.இந்த நிகழ்வில் இந்து, இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று காணியம்மனை வழிபட்டனர். மத வேறுபாடுகளை கடந்து நடைபெறும் இந்த பாரம்பரிய நிகழ்வு, சுற்றுவட்டார மக்களால் மத நல்லிணக்கத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக பாராட்டப்படுகிறது.வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்த திருவிழா, சமூக வலைதளங்களிலும் பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.