மெட்ரோ திட்டப் பணிகளை விரைவாக நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தல்
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கிலோமீட்டர் நீளத்தில் மூன்று வழித்தடங்களில் நடைபெற்று வரும் பணிகளை முதல்-அமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் ஒரு பகுதியாக அவர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து நந்தனம் மெட்ரோ நிலையத்தை சென்றடைந்தார். அங்குள்ள மெட்ரோ ரெயில் தலைமையகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து கிண்டி பகுதியில், கத்திப்பாரா அருகே பட்ரோட்டில் இருந்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரை அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ வளைவு பாதை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். ஆறு தூண்களை இணைக்கும் வகையில் 1,354 அடி நீளத்திலும், 101 அடி உயரத்திலும், 410 அடி ஆரத்துடனும் ‘பேலன்ஸ்டு கேன்டிலீவர்’ எனப்படும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இந்த வளைவு பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட முதல்-அமைச்சர், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் பணியில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார். மேலும், திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் உயர்தரமாக பணிகளை நிறைவு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.பின்னர் போரூரில் இருந்து ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் நவீன மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்துக்குச் சென்றார்.
அங்கு நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.மெட்ரோ திட்டங்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவடைய பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். மேலும், கத்திப்பாரா மெட்ரோ கட்டுமானப் பணிகளும், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் இயக்கத்திற்கான முன்னேற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாக அவர் பாராட்டுத் தெரிவித்தார்.அதேபோல், மெட்ரோ கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பகல் நேரத்திற்கு பதிலாக இரவு நேரங்களில் கட்டுமானப் பணிகளை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.