எனது வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதாரம் அம்மாதான்: ஜேசன் சஞ்சய்
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.ஜேசன் சஞ்சய் கனடாவின் டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு தொடர்பான டிப்ளமோ படித்துள்ளார். பின்னர் லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பையும் முடித்துள்ளார். இதற்கு முன்பு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.‘சிக்மா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஜேசன் சஞ்சய், தனது குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது வாழ்க்கையில் அம்மா முக்கியமான ஆதாரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:
“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னையும், எனது சகோதரியையும் பற்றியே அவர் சிந்தித்துக் கொண்டிருப்பார். நான் ஒருநாள் அவருக்கு போன் செய்யாமல் இருந்தாலும், அவரே அழைத்து, ‘இன்று என்ன நடந்தது? எப்படி இருக்கிறாய்?’ என்று அக்கறையுடன் விசாரிப்பார்.எனது அப்பா, அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு தயக்கம் இருக்கும்.
அவர்கள் அந்த அளவுக்கு எனக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை. ஆனால் எனது சகோதரியிடம் மட்டும் என்னுடைய அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசுவேன்.
ஒருபுறம் எனக்கு அதிகமான அன்பு கிடைக்கிறது. அதே நேரத்தில், இயல்பாகவே என் மீது பல எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. அதனால் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே நான் எடுத்துக்கொள்வேன். திரையுலகில் நுழைவது எனக்கு எளிதாக இருந்தது போன்ற எதிர்மறையான கருத்துகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.ஒரு திரைப்படத்தை மக்கள் பார்க்கும்போது, அவர்களின் கவனம் அந்தப் படத்தின் மீதுதான் இருக்கும். அந்தப் படத்தை இயக்கியது யார் என்பது குறித்து அவர்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.இந்நிலையில், ஜேசன் சஞ்சயின் தாயார் சங்கீதா, தனது கணவரும் தமிழக முதல்-அமைச்சருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார். லண்டனில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரான அவர், வழக்கைத் தொடர்ந்து நடத்த விருப்பமில்லை என தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்தது.