உணவு தேடி வந்த கரடியால் தீப்பற்றிய வீடு... அமெரிக்காவில் வினோதம்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உணவு தேடி வீட்டுக்குள் நுழைந்த கரடியால் சமையலறையில் தீப்பற்றி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொலராடோவில் உள்ள மவுண்ட் கிரெஸ்டட் பட் பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் கரடிகளுக்குக் கிடைக்கும் இயற்கை உணவு குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த கோடை காலத்தில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் கரடிகள் வருவது அதிகரித்துள்ளது.இந்த சூழலில், கடந்த 19-ந்தேதி அதிகாலை 1.16 மணியளவில் ஒரு பெரிய கரடி அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்தது. சமையலறைக்குச் சென்ற அந்த கரடி, அங்கிருந்த பிரிட்ஜை திறந்து உணவைத் தேடியுள்ளது.அப்போது பிரிட்ஜில் இருந்த உணவுப் பொருட்களை வெளியே எடுக்க முயன்றபோது, அருகில் இருந்த சமையல் அடுப்பின் பட்டன் எதிர்பாராதவிதமாக கரடியால் திருப்பப்பட்டது. இதனால் அடுப்பு பற்றிக்கொண்டு, சமையலறையில் இருந்த பொருட்களுக்கும் தீ பரவியது.தீப்பற்றியதை கவனித்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.எனினும், மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் தொடர்ந்து நுழைந்து வந்த அந்த கரடி பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் கருதினர். இதையடுத்து வனவிலங்கு விதிமுறைகளின்படி அந்த கரடியை அதிகாரிகள் சுட்டு கருணைக்கொலை செய்தனர்.மேலும், கரடிகள் வீடுகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை முறையாகப் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.