ஆஸ்திரேலியா: பண்ணையில் ரூ.2.40 கோடி மதிப்பிலான சிப்பிகளை திருடிய கும்பல்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் செயல்பட்டு வரும் பிரபல சிப்பி பண்ணையில் இருந்து, சுமார் 3.50 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள 4 லட்சம் சிப்பிகளை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும்.சிட்னி நகருக்கு வடக்கே உள்ள தாரீ பகுதியை ஒட்டிய மான்னிங் ஆற்றில் ‘லாடிடியூட் 31 ஆய்ஸ்டர்ஸ்’ என்ற சிப்பி பண்ணை செயல்பட்டு வருகிறது. ரையன் ப்ரீமேன் என்பவர் இந்தப் பண்ணையின் உரிமையாளராக உள்ளார்.நள்ளிரவு நேரத்தில் படகுகளில் வந்த திருடர்கள், பண்ணையில் வளர்க்கப்பட்ட உயர்தர சிட்னி ராக் ஆய்ஸ்டர்ஸ் உள்ளிட்ட சிப்பிகளையும், சில உபகரணங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த சிப்பிகள் தனித்தனி மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை திருடர்கள் குறிவைத்துள்ளனர்.300-க்கும் அதிகமான பெரிய மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 லட்சம் சிப்பிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகை கால விற்பனைக்காக சிப்பிகளை தயார்படுத்த கடந்த செவ்வாய்க்கிழமை காலை பண்ணைக்கு சென்ற ரையன் ப்ரீமேன், அவை மற்றும் உபகரணங்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.திருடப்பட்ட சிப்பிகளின் அளவு, பண்ணையின் மொத்த உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பண்ணை உரிமையாளருக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த திருட்டு சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நடந்துள்ளது. இருப்பினும், பண்ணையில் இருந்த சிப்பிகளின் எண்ணிக்கையை மீண்டும் சரிபார்த்து, திருட்டு நடந்ததை முழுமையாக உறுதி செய்த பின்னரே போலீசில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நியூ சவுத் வேல்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வளவு அதிகமான சிப்பிகளை தனிநபர்களால் எளிதில் விற்பனை செய்ய முடியாது என்பதால், சிப்பி வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களின் பின்னணி குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருடப்பட்ட சிப்பிகள் சட்டவிரோதமாக சந்தைகளிலோ அல்லது உணவகங்களிலோ விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, சந்தேகத்திற்கிடமான முறையில் சிப்பிகள் விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.