ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் ஆலோசனை
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாகவும் ஈரான் அறிவித்தது.இதனிடையே, உரிய அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களில் கப்பல்களில் பணியாற்றிய இந்திய மாலுமிகள் பலரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சூழலில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சியுடன் ஜெய்சங்கர் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டார்.
மேலும், வணிக மற்றும் சரக்கு கப்பல்கள் மீது எந்த சூழ்நிலையிலும் தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.யார் மேற்கொண்ட தாக்குதலாக இருந்தாலும், அவற்றை இந்தியா கண்டிப்பதாகவும், பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிமுறைகள் மூலமாகத் தீர்வு காணும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.