அசாமில் கனமழை, வெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக உயர்வு
அசாமில் பெய்துவரும் கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.பருவமழையால் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் மாநிலம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கோல்பாரா, கச்சார், லக்கிம்பூர், திப்ருகர், ஜோர்ஹாட், பிஸ்வநாத், சராய்தியோ, நல்பாரி, பக்சா, சிவசாகர், தர்ரங், சோனித்பூர், தின்சுகியா, உதால்குரி, கோலாகாட், கர்பி அங்லோங் உள்ளிட்ட மொத்தம் 25 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. மேலும், 600-க்கும் அதிகமான கிராமங்களும் இந்த இயற்கை பேரிடரால் பாதிப்பை சந்தித்தன.தற்போது பல இடங்களில் வெள்ளநீர் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளதால், பாதிப்பின் தீவிரமும் குறைந்து வருகிறது. இருப்பினும், வெள்ளம் தொடர்பான சமீபத்திய சம்பவங்களில் மேலும் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.இன்னும் சிவசாகர், கோலாகாட், ஜோர்ஹாட், நகாவன் மற்றும் சராய்தியோ ஆகிய 5 மாவட்டங்களில் மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை.
சுமார் 1.92 லட்சம் பேர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.9 லட்சமாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், வருகிற புதன்கிழமை (5-ஆம் தேதி) அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுடன் மாநில அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வாகனங்கள், கால்நடைகள் மற்றும் காப்பீடு செய்யப்பட்ட பிற சொத்துகளுக்கான இழப்பீட்டை விரைவாக வழங்க வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.மேலும், பிரதம மந்திரி சூரிய கர் திட்டத்தின் கீழ் 9,289 பயனாளிகளுக்கு ரூ.41.67 கோடி நிதியை மாநில அரசு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், வெள்ளச் சேதங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வுப் பணிகள் 7-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.