4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 + ஜிஎஸ்டி கட்டணம்: மாணிக்கம் தாகூர் கண்டனம்
ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வங்கிக் கணக்குகளில் பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டணத்தை மத்திய அரசு மற்றும் எஸ்.பி.ஐ. நிர்வாகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2005-ம் ஆண்டு ‘No-frills’ கணக்குகளை அறிமுகப்படுத்தியதாகவும், பின்னர் 2012-ம் ஆண்டு ஆகஸ்டில் அதன் வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்டு BSBDA எனப்படும் ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் சாதாரண மற்றும் ஏழை மக்களும் நவீன வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை காங்கிரஸ் அமைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பெரும் தொழிலதிபர்கள் பயன்படுத்தாத இந்த BSBDA கணக்குகளையே ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருவதாகக் கூறியுள்ள மாணிக்கம் தாகூர், அவர்களின் கணக்கில் இருந்து நான்கு முறைக்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்தால் ரூ.15 மற்றும் அதனுடன் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.கிராமப்புறங்களில் மக்கள் இன்னும் ரொக்கப் பணத்தையே முக்கியமாக நம்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ள ரொக்கப் பணத்தின் அளவு 2024-25-ம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும், 2025-26-ல் 12 சதவீதமாகவும், 2026-27-ல் தற்போது 12.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இத்தகைய சூழலில், UPI தொடர்பான மறைமுகக் கட்டணங்கள் ஒருபுறம் வரவிருக்கும் நிலையில், மறுபுறம் பொதுமக்கள் தங்களது சொந்தப் பணத்தை எடுப்பதற்கே கட்டணம் விதிப்பது ஏற்க முடியாதது என அவர் தெரிவித்துள்ளார்.ஏழை மக்களின் உழைப்பில் இருந்து வசூலிக்கப்படும் இந்தக் கட்டணத்தை மத்திய மோடி அரசும் எஸ்.பி.ஐ. நிர்வாகமும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மக்கள் பணம் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.