மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி: ஓய்வு பெற்ற சார்பதிவாளர் கைது
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு தொடர்புடையதாக கூறப்படும் ரூ.60 கோடி மதிப்பிலான சொத்து மோசடி வழக்கில், ஓய்வு பெற்ற சார்பதிவாளர் அனந்தராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை தல்லாகுளம் அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகாவிலாஸ் பங்களாவும், அதனுடன் சேர்ந்துள்ள சுமார் 2 ஏக்கர் தோட்ட நிலமும், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானதாகும். இந்த சொத்தின் மதிப்பு சுமார் ரூ.60 கோடி என கூறப்படுகிறது.இந்த சொத்து முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ராமாயி ஆயியார், செந்தமிழ்செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், முன்னாள் தாசில்தார் அன்பழகன், இளையராஜா, அனிஷ், அனந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தானகருப்பன் என 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காளிக்குமார், சப்-கலெக்டர் அன்பழகன் மற்றும் வருவாய் அதிகாரி அரசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்திரப்பதிவு தொடர்பான தகவல்களை ஆய்வு செய்தனர்.
ராமாயி ஆயியார் தரப்பினர் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில், அப்போது சார்பதிவாளராக பணியாற்றிய அனந்தராமன் மூலம் உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனிஷ் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணம் பதிவு செய்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து அனந்தராமனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் என்பதும், தற்போது ஓய்வு பெற்றுவிட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு அனந்தராமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அனந்தராமன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.