விஜய் பெங்களூரு வந்தால் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்; வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை
தமிழக முதல்-அமைச்சர் விஜய் பெங்களூரு செல்லக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் வந்தால் பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என கன்னட சாலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காவிரி நதி நீர் பகிர்வு விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தின. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வாட்டாள் நாகராஜ், "தமிழக முதல்-அமைச்சர் விஜய் பெங்களூருவுக்கு வந்தால் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம். தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தால் அவரை வரவேற்போம். மேலும், தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி கர்நாடகாவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய பந்த் நடைபெறும்" என்று தெரிவித்தார்.காவிரி நீர் பகிர்வு தொடர்பான பிரச்சினை தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறிப்பாக மழைப்பொழிவு குறையும் காலங்களில் இந்த விவகாரம் தீவிரமடைவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால், அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவது தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.இதனுடன், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை அமைக்கும் முயற்சியையும் கர்நாடக அரசு முன்னெடுத்து வருகிறது.